திங்கள், 2 நவம்பர், 2009

நானும் ஒரு வண்ணத்துப்பூச்சி

பூக்களில் தேன் தேடி
சுற்றித் திரியும்
வண்ணத்துப் பூச்சி போல

மனித மனங்களில்
அன்பைத்தேடி
சுற்றித் திரியும்
நானும் ஓர்
வண்ணத்துப் பூச்சி தான்!

உங்கள் மனமதில்
அன்புத் தேனைத் தேடி
வந்திருக்கின்றேன்...

எனக்கும் உங்கள்
இதய வாசலில்
வழிவிடுங்கள்...!

***
நான் படித்து ரசித்த கவிதை!!

வண்ணத்துப் பூச்சிகளாய்
வந்து போகும்
வாழ்க்கை வேண்டும்...

எந்த பூவுக்குள்
தவம் செய்தால்
வண்ணத்துப்பூச்சியாய்
பிறக்க முடியும்?

வீடுகள் கட்டுவதில்லை
தட்டுத்தடுமாறி
வீட்டுக்குள் வந்தாலும்
விட்டு விடுதலையாகி
வெட்டவெளி வந்தடையும்!

கருப்பு நிறத்தை
வெறுப்பதில்லை...

பூக்களற்ற தனிமையின்
வெறுமையில்
தற்கொலைக்குத்
துணிவதில்லை...

பட்டாம்பூச்சியின்
கண்ணீர்பட்டுத்
தெறித்ததில்லை
எந்த பூவிலும்!

பூவிற்குள் பூவாகிப்
புணரும் அழகில்
ஆன்மக் கலப்பின்
மேன்மை சொல்லும்,

பூக்களை
விதவைகளாக்காமல்
செத்துப் போகும்,

சிறகைப் பிய்க்கும்
குழந்தையின்
சந்தோஷத்திற்காய்
ஒரு கவிதை போல்
கிழிந்து போகும்!

சொல்லுங்கள் -
எந்த பூவுக்குள்
தவம் செய்தால்
வண்ணத்துப்பூச்சியாய்
பிறக்க முடியும்???

கருத்துகள் இல்லை: